இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் அண்மையில் விசாரித்து, அரசியல் அமைப்பு சட்டப்படி உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே கார்களில் சிவப்பு விளக்கை பயன்படுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து மாநில டிஜிபிக்கள் உள்பட பல அதிகாரிகள் கார்களில் இருந்த சிவப்பு விளக்குகளை அகற்றினர். சிலர் நீல விளக்குகளை பொருத்திக் கொண்டனர். இந்நிலையில் சிவப்பு விளக்கு பொருத்திக் கொள்ள தகுதியானவர்கள் குறித்த புதிய பட்டியலை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அதன்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆகியோர் சுழலும் சிவப்பு விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். தலைமை தேர்தல் ஆணையர், சிஏஜி, மாநிலங்களவை துணை தலைவர், மக்களவை துணை சபாநாயகர், மத்திய இணை அமைச்சர்கள், அட்டர்னி ஜெனரல் ஆகியோர் சாதாரண சிவப்பு விளக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகளை பொறுத்த மட்டில் கவர்னர், முதல்வர், ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், மாநில அமைச்சர்கள் மட்டும் சிவப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும். மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்னர் இறுதி ஒப்புதலுக்கான கேபினட்டுக்கு இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.