Thursday, February 13, 2014

பழம்பெரும் இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார்

இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

' மூன்றாம் பிறை’, 'அழியாத கோலங்கள்', 'வீடு', 'சந்தியா ராகம்', 'மறுபடியும்', ’சதி லீலாவதி’ என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. தனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா தான்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் 'தலைமுறைகள்' வெளியானது. இயக்குநர் சசிகுமார் தயாரித்திருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று காலை பாலு மகேந்திராவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார்.
சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்கிறார். இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.